Sunday, March 18, 2018

அறிவுக் கடலில் சங்கமம் ….!*

உறக்கம் உறங்காமல்
கனவைப் பிறப்பித்தது
விளைவுகள் அறியாமல்
வியாக்கியானம் வியாபித்தது
உரமெறியே உள்ளத்தில்
உறுத்தல் உறைத்தது
உயர்வுள்ளலாய் உரைக்க
உரத்துச் சொன்னது

ஏட்டறிவும் பட்டறிவும்
போட்டிகள் போடுது
சிகரத்தை தொட்டுவிட
உந்தித் தள்ளுது
பார்த்ததும் படித்ததும்
எண்ணத்தில் ஓடுது
செயலில் ஆக்கம்பெற
துடியாய் துடிக்கிது
மூத்தொர் மொழிந்தது
கண்கூடாய் தெரியுது
காரியம் பழுத்துவிட
காலமும் கனியுது
குறுகுறுக்கும் மனதில்
பேரலைகள் அடிக்குது
கரைசேர கலமொன்று
வேண்டுமென கேட்குது
தெளிந்த நீரோடைபோல்
எண்ணங்கள் சுரக்குது
வற்றாத பெருநதியாய்
அறிவுக்கடலில் சங்கமிக்குது.

ராஜா வாவுபிள்ளை

No comments: