Saturday, March 10, 2018

இத்துணை அவசரமாக எதற்குக் கூப்பிட்டிருப்பார் !


ஓர் அனைத்துலகப் பள்ளியில்,  அனலையும் தூசியையும் பொருட்படுத்தாமல்,    பூங்காவிலுள்ள செடிகளுக்கு, நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் தோட்டக்காரர் ஒருவர்.

" கங்கா தாஸ், தலைமையாசிரியை உன்னை உடனே வரச்சொன்னார்" . . .
அந்த அலுவலகப் பையனின் அந்தக் கடைசி இரு சொற்களின் தொனி அழைப்பின் அவசரத்தைச் சுட்டிக் காட்டியது.

உடனே தன் கை கால்களை அலம்பிக்கொண்டு, .. அறையை நோக்கி விரைந்தார்.

அன்று என்னவோ பூந்தோட்டத்திலிருந்து அலுவலதத்திற்குச் செல்வது நெடுந்தூர நடையாய்த் தோன்றியது. அவரது இதயம், நெஞ்சாங் கூட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து விழுவது போன்ற ஓர் உணர்வு.

அவர் மனத்தில் பலவாறான எண்ணங்கள் அலைமோதின. ஏன், என்ன நடந்திருக்கும்? இத்துணை அவசரமாக எதற்குக் கூப்பிட்டிருப்பார் என்ற கேள்விக் கணைகள். . .


அவர் நேர்மையான தொழிலாளியாவார். எத்தருணத்திலும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை. . .

அறைக் கதவைத் தட்டினார். . .

"என்ன கூப்பிட்டீங்களா மேடம்?"
"உள்ளே வா . . ." என்ற அந்த அதிகாரக் குரல் அவரது படபடப்பை மேலும் அதிகரித்தது. . .
பாதி நரை விழுந்த மயிர், சீராய் சீவி முடிச்சுப் போடப்பட்ட தலை,  நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட சாரியைப் பாரம்பரியமான வழக்கில் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி பேருக்கேற்ப அவர் மூக்கின்மேல் அமர்ந்துகொண்டிருந்தது.

மேசை மேலிருந்த தாளைச் சுட்டிக்காட்டி, "இதைப் படி". . . என்றார்.

"ஆனால், மெ..மெ மேடம் எனக்குப் படிப்பறிவு இல்லிங்க மேடம்.
எனக்கு இங்கிலிஷ் கூட படிக்க வராது."
மேடம் நான் தவறேதும் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். . .எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். . .

என் மகள்  இந்தப் பள்ளியில் இலவசமாகப் படிக்க வாய்ப்பு தந்தீங்க. அதற்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாவேன். . .என் மகளுக்கு இப்படியொரு வாய்ப்பினை நான் கனவில்கூட காண முடியாது."
இப்படிக் கூறிக்கொண்டே அவர் தேம்பினார். நடுக்கமும் அவரை ஆட்கொண்டது.

" போதும் நிறுத்து. நீ ரொம்பதான் கற்பனை செய்கிறாய். நான் ஆசிரியர் ஒருவரைக் கூப்பிடுகிறேன். அவர் இதை உனக்கு, வாசித்து மொழிப்பெயர்த்துக் கூறுவார். . . இது உன் மகள் எழுதியது. இதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்."

விரைவிலேயே அங்கு வந்த ஆசிரியை ஒருவர் அதனை வாசித்து ஹிந்தியில் ஒவ்வொரு வரியாக மொழிப்பெயர்த்துக் கூறினார்.

"இன்று அன்னையர் தினம் தொடர்பாய் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னோம். இதுதான் அக்கட்டுரைகளில் ஒன்று.

"நான் பீஹாரிலுள்ள ஒரு கிராமத்தைத் சேர்ந்தவள். அந்தக் கிராமத்தில் மருத்துவ வசதியோ கல்வியோ இல்லை. அதைக் கனவில்கூட காண முடியாது.
பிரவசத்தின்போது பல பெண்கள் மரணித்துள்ளனர். என் தாயாரும் அவர்களுள் ஒருவர். என்னை அவர் கைகளில் ஏந்தும் பாக்கியத்தைக்கூடப் பெறவில்லை. என்னை  முதன்மதலில் தன் கைகளில் ஏந்தியவர் என் அப்பாதான். . .சொல்லப்போனால் அவர் ஒருவர் மட்டும்தான்.
நான் ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டேன். பிறக்கும்போதே என் தாயாரை விழுங்கிவிட்டேன் என்று உறவினர் குறைபட்டுக்கொண்டனர்.  அதனால், எல்லோரும் கவலையடைந்தனர். உடனே மறுமணம் செய்துகொள்ளும்படி என் தந்தையை வற்புறுத்தினர். ஆனால், என் அப்பா அதை மறுத்துவிட்டார்.

என் தாத்தாவும் பாட்டியும் அவரைச் சம்மதிக்க வைக்க எல்லாவித யுத்திகளையும் கையாண்டனர். அறிவுப்பூர்வமான வாதங்களையும் முன் வைத்தனர்.

என் தாத்தா பாட்டிக்கு ஒரு பேரன் வேண்டுமாம். ஆகவே, அவரை மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தினர். அப்படி அவர் இணங்காவிட்டால் அவரைத் தள்ளி வைத்துவிடுவதாகவும் அச்சுறுத்தினர்.

என் அப்பா சற்றும் தயங்காமல் நிலம், நல்ல வாழ்க்கை, சொகுசான வீடு, கால்நடைகள் மற்றும் அக்கிராமத்தில் கௌரவமான வாழ்க்கை வாழ அவருக்கு இருந்த அனைத்து சலுகைகளையும் துறந்தார்.

கையில் சல்லிக் காசுகூட இல்லாமல் - ஆனால் என்னை மட்டுமே கையில் ஏந்தியவாறு, இந்த மாநகரில் குடியேறினார்.   வாழ்க்கை மிகவும் சிரமமானதாகவே இருந்தது. அப்பா இரவும் பகலும் கடுமையாக உழைத்து என்னைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணி வளர்த்தார்.

நான் விரும்பிச் சாப்பிட்ட உணவுப் பண்டங்களைத் திடீரென தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வார். அதன் காரணம் எனக்கு அப்பொழுது புரியவில்லை . .  . தட்டில் இருக்கும் அந்த ஒரு துண்டை நான் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு நடந்துள்ளார் என்பதை நான் பெரியவளாக வளர்ந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

அவர் சக்திக்கு மீறிய ஒரு வசதியை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.

இப்பள்ளி அவருக்குப் புகலிடமளித்து சிறப்பு செய்துள்ளது. இப்பள்ளி இன்னொரு மாபெரும் பரிசையும் தந்துள்ளது. ஆம், நான் இப்பள்ளியிலேயே சேர்ந்து பயில வழங்கியுள்ள வாய்ப்புதான் அது.

அம்மா என்றால் அன்பும் அரவணைப்பும் எனின், என் அப்பா அதற்குப் பொருத்தமானவர். . .
அம்மா என்பவர் இரக்கமிக்கவர் எனின், என் அப்பா அதற்கும் பொருத்தமானவரே. . .
அம்மா என்பவர் தியாகி எனின், நிச்சயமாக என் அப்பா அதையும் ஆக்ரமிக்கின்றார். . .

சுருங்கக்கூறின், தாய் ஒருவரின் வடிவம் அன்பு, பராமரிப்பு, தியாகம், இரக்கம் எனின்

*என் அப்பாதான் இவ்வுலகிலேயே மிகச் சிறந்த தாய்*

அன்னையர் தினத்தில் இம்மண்ணில் மிகச் சிறந்த பெற்றோராக இருக்கும் என் அப்பாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். . .
இப்பள்ளியில் கடின உழைப்பாளியாகத் திகழும் தோட்டக்காரருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்து அவர்தான் என் அப்பா என்பதைப் பெருமையோடு அறிவிக்க விரும்புகிறேன்.

இதை வாசிக்கும் என் ஆசிரியை எனக்கு நல்ல புள்ளிகள் தரமாட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆயினும் தன்னலமற்ற அப்பாவுக்கு  ஒருவர் வழங்கும் ஒரு சிறிய அன்பளிப்பாக இக்கட்டுரை இருக்குமென நம்புகிறேன்.

அந்த அறை நிசப்தமானது. . .
கங்கா தாஸ் தேம்பி அழுவது மட்டுமே கேட்டது. . .
கடும் வெயில்கூட அவரின் ஆடையை வியர்வையால் ஈரப்படுத்தாது இருந்திருக்கலாம். ஆனால், தன் மகளின் சொற்கள் அவர் உள்ளத்தையே ஈரப்படுத்தியது. . .
அவர் கைகட்டி, வாயடைத்து அங்கு நின்றுகொண்டிருந்தார். . .

ஆசிரியையிடமிருந்து அந்தத் தாளை வாங்கி தன் நெஞ்சின்மேல் வைத்து கண்கலங்கினார். . .

தலைமையாசிரியைத் தன் இருக்கையிலிருந்து எழுந்தார். . . கங்கா தாஸை அமரச்சொன்னார். அவர் பருக ஒரு கோப்பை நீர் வழங்கி அவரிடம் ஏதோ சொன்னார். அவர் குரலில் ஒரு கனிவு வெளிப்பட்டது.

கங்கா தாஸ் உன் மகளின் இக்கட்டுரைக்காக 10/10 புள்ளிகள் வழங்கியுள்ளோம். இப்பள்ளி வரலாற்றிலேயே அன்னையர் தினம் தொடர்பில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை இதுதான்.  நாளைக்கு இப்பள்ளியின் *அன்னையர் தின விழா* வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இப்பள்ளியின் ஒட்டுமொத்த நிர்வாகஸ்தரும் உன்னையே சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவுசெய்துள்ளனர்.
பிள்ளையை வளர்த்தெடுப்பதில் ஆண் ஒருவன் காட்டும் அன்பு, அர்ப்பணிப்பினை கௌரவிக்கவும் ஒரு சிறந்த பெற்றோராகத் திகழ பெண் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதல்ல என்ற உண்மையை உலகறியச் செய்யவும் நாங்கள் இம்முடிவைச் செய்துள்ளோம்.

அதற்கும் மேலாக, உன் மகள் உன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை மறு உறுதிப்படுத்துவதுடன் போற்றி அங்கீகரிக்கவும் உன் மகளுக்குப் பெருமை சேர்க்கவும் உன் மகள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இவ்வுலகிலேயே தலைசிறந்த பெற்றோரை இப்பள்ளி பெற்றிருப்பதற்காக இப்பள்ளியிலுள்ள அனைவரும் பெருமைகொள்ளவும் இம்முடிவைச் செய்துள்ளோம். . . .

"நீ பூங்காவை மட்டும் பராமரிக்கவில்லை. மாறாக உன் வாழ்வின் விலை உயர்ந்த மலரை அழகிய முறையில் பேணி வளர்த்துள்ளாய். நீதான் உண்மையான தோட்டக்காரன்."

" கங்கா தாஸ், அந்த நிகழ்ச்சிக்கு நீ சிறப்பு விருந்தினராக வருவாயா?"
.
... படித்ததில் மிகவும் பிடித்தது

No comments: